
திருக்குறள் 247: அறத்துப்பால்: அதிகாரம் 25: அருளுடைமை.
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.”
“அருள்’ என்பது எங்கும், எப்போதும் நிறைந்திருக்கும் தன்மை உடையது. அதற்கென்று தனிப் பெயரோ, உருவமோ, வடிவமோ, நிறமோ, காலமோ, வெளியோ இல்லை.
வள்ளுவர் பெருமான் கூறும் “அவ்வுலகம்” என்பது, இத்தகைய அருளால் முழுமையாகச் சூழப்பட்டுள்ள வாழ்வின் உண்மைநிலையாகவும் கொள்ளலாம். அந்த அருளின் பொருளை அறியாதவர்களுக்கு, இவ்வுலக வாழ்வு இருந்தும் இல்லாதது போன்றதாகவே ஆகிறது.
அதாவது, அருளின் உண்மைப் பொருளை அறிந்து இவ்வுலகில் வாழ இயலாதவர்களுக்கு, அருள் என்பதும் இல்லை என்றாகிவிடுகிறது; அருள் இல்லையெனில், அருளால் சூழப்பட்டுள்ள “அவ்வுலகமும்” அவர்களுக்கு இல்லாததாகிவிடுகிறது.
மாறாக, ஒருவர் இவ்வுலக வாழ்விலேயே அருளின் பொருளை, அவ்வருளாலேயே அறிந்து உணரும் அந்தக் கணமே, அருள் சூழ்ந்த அவ்வுலக வாழ்விற்குப் பாத்திரமாகிவிடுகிறார்.
என்பதாக வள்ளுவர் பெருமானின் இத்த திருக்குறளுக்கு மெய்ப்பொருளாக எடுத்துக் கொள்ளலாம் .
வாழ்க தமிழ், 🙏 வாழ்க வள்ளுவம், 🙏

