
“சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” மாணிக்கவாசகரின்
சிவபுராண வரிகள்.
பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின் நினைவாகவும் எல்லா உயிர்களிடத்தும் விளங்குபவன் பரமேஸ்வரனே ஆவான் என்பது உபநிஷத் கருத்து.
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:
இத்தகைய உபநிஷத் கருத்தின் படி, ஒவ்வொருவர் உள்ளும் சிந்திப்பவரின் சிந்தனையாக சிவமே விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. அவ்வாறு சிந்திப்பவரின் சிந்தனையாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவம் என்னும் அவன்-
சதா இடைவிடாது அங்கும் இங்குமாக நிற்காமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும் என் சிந்தையுள்ளும் நின்ற அதனால்…
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி:
அவ்வாறு என் சிந்தையுள் அவன் நின்ற அதனால், அவன் அருள் என் சிந்தனைக்கும் கிட்ட , அதனால் அச்சிந்தனையானது, அவன் தாள் வணங்கும் அருளுக்கு அவனாலேயே பாத்திரமாகி, அதுவே செயலானது.
திருச்சிற்றம்பலம், 🙏

