
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்:
பிருஹதாரண்யக உபநிஷதம் 3.8.10 ல் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ‘கார்கி, இந்த அக்ஷர பிரம்மத்தை அறியாமல், “அஹம் பிரம்மாஸ்மி நான் பரம்பொருளாக இருக்கிறேன்” என்று வெறும் பெயரளவில் தன்னையே தான் போற்றிக் கொள்ளும் பேர் கொண்ட பார்ப்பானாக இருந்து கொண்டு, ஒருவன் இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆஹூதிகள் அளித்தாலும், யாகங்கள் செய்தாலும், தவம் செய்தாலும் அவைகள் அவனுக்கோ, அந்நாட்டை ஆளும் அரசனுக்கோ அல்லது அந்நாட்டு மக்களுக்கோ, நற்பலன்களை வழங்குவதற்கு பதிலாக தீய பலன்களாக அவைகள் உருமாறும்.

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்:
இதனால் போர் திறமை மிக்க அந்நாட்டை ஆளும் மாமன்னர்களுக்கு கூட கொடிய நோய்கள் உண்டாகும்,

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே:
பார் போற்றப் பெருமை பெற்றிருந்த நாட்டு மக்கள் பஞ்சத்தில் வாடுவார்கள்,

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே:
பெருமைக்குரிய பெருமான் நந்தி தெரிந்து சொன்ன உண்மை இதுவாகும்
திருச்சிற்றம்பலம் 🙏

