திருமூலர் திருமந்திரம் உரை எண் 38 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 

யோகத்தில் மெய் மறந்த நிலைக்குப் போகும்போது அங்கு மெய்யைப் பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய அறிவு  மறைந்து போய்விடும்.
மெய்மறந்த அந்நிலையில்  அறிவுக்கு அறிவாக விளங்கிக் கொண்டிருக்கும் அருட்பெரும் ஜோதியான இறைவனின் வெளிப்பாடு ஏனையவருக்கு பிதற்றல் போல் தான் தென்படும்.
அவ்வாறு மெய்மறந்த, அதாவது அறிவு மறைந்த அந்நிலையில், இறைவன் மிகப்பெரியவனாகவும், அறிதற்கு அரியவனாகவும், யாராலும் பிறப்பிக்கப்படாத உருவத்தை கொண்டவனாகவும், நந்தி என்னும் பேர் கொண்டு விளங்குபவனாகவும் இருக்கும் அவனின் பெருமைகளை கண்டுனர்ந்து  யான் பிதற்றுகின்றேனே.
திருச்சிற்றம்பலம் 🙏