“ஷஷ்டி விரத பலன்”


‘கந்து’ என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி’ என்று பொருள் உள்ளது. உயிர்கள் என்னும் யானைகளை மாயையிலிருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் ‘கந்தன்’ ஆனார். ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள்.

ஆகையால் ‘கந்தன்’ என்பதற்கு ஒன்றோடு ஒன்று ‘இணைப்பை ஏற்படுத்துதல்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது இருவேறு இணையாத தன்மைகள் ஞானஸ்கந்தன் கருணையால், ஒன்றினை ஒன்று பற்றுக்கோடாக பற்றி இணைந்தால் அதுவே கந்தன் கருணை ஆகின்றது !


ஈஸாவாஸ்ய உபநிஷத்: 1: 5 ல், அது அசைவுள்ளது (1); (எனினும்) அசைவதில்லை(2) ;அது தூரத்திலுள்ளது(3) ; (எனினும்) ஸமீபத்திலுள்ளது(4) ; அது அனைத்திற்கும் உள்ளே இருப்பது(5) ; (எனினும்) அனைத்திற்கும் அப்பால் உள்ளது (6) என மூன்று இரு வேறு தன்மைகளாக ஆக மொத்தம் ஆறு விதமாக ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி விளக்குகிறது.
அதாவது ஏகமயமான ஆத்ம ஸ்வரூபத்தை இருவேறு தன்மை கொண்டதாகவே ஈஸாவாஸ்ய உபநிஷத் விளக்கி காட்டியுள்ளது. ‘அசைகிறது எனினும் அசையாதது ‘ என்பது போல தோன்றும் இவ் இருவேறு இணையாத தன்மைகளை…

எவ்வாறு அசுரனாகிய சூரபத்மனை அழிக்காமலேயே தேவர்களையும் காத்து சூரபத்மனுக்கும் அருளினாரோ அவ்வாறே ஒன்றோடு ஒன்று இணையாத  ஆத்மாவின் ஆறு விதமான தன்மைகளையும்  “இருக்கிறது” என்னும் ஒரே பிரம்ம மந்திரக்கயிற்றல் இணைத்து ‘ஒன்றாய்’ ஞான கர்மத்தில் உணரச்செய்யும் மிகப்பெரும் கருணைமிகு திறனை ஞான ஸ்கந்தனான கந்தபெருமான் கொண்டுள்ளதால்,

ஒவ்வொரு மாதமும் ஆறாவது திதியாக வரும் சஷ்டியில், தேக சிந்தனை மறக்க விரதம் இருந்து, ‘சரவணபவ’ என்னும் ஆறுஎழுத்து மந்திரத்தை ஒருமுகமாக நினைத்து வழிபட்டால், பெறுதற்கரிய ஆத்ம ஞானம்,  மனிதப் பிறவிக்கு மட்டுமே சிறப்பாக அருளப்பட்ட ஆறாவது அறிவின் மூலம் வெளிப்பட்டு பிரகாசிக்கும்.


அதாவது தேய்பிறையின் ஆறாவது நாளான சஷ்டி விரதத்தில் தேகசுத்தி ஏற்பட்டு, அது வளர்பிறையின் ஆறாவது நாளான சஷ்டி விரதத்தில் ஆத்ம சுத்தியில் முடியும், என்பதற்காகவே இந்த சஷ்டி விரதம் ஒவ்வொரு மாதமும் இரு முறை ஞான ஸ்கந்தனை குறித்து மேற்கொள்ளப்படுகிறது என்பதாக பொருள் கொள்ளலாம்.
சரவணபவ நம 🙏

Leave a comment