You Are That! – “பிரஜ்ஞானம் பிரும்மம்”

“அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு
அவிழும் இவ் அல்லல் என்று உந்தீபற

அன்றி அவிழாது என்று உந்தீபற”.

திருவியலூர் உய்யவந்த

தேவ நாயனார் அருளிய

திரு உந்தியார். பாடல் 27.

விளக்கம்:

அவிழ இருக்கும் அறிவுடன்:-

அறிவு என்பது அறியப்படும் பொருள் அறிபவன் என்னும் இவ்விரண்டின் தன்மையுடன் இணைந்தே இருக்கும். அதாவது ஒவ்வொரு பிறப்பின் போதும் ‘அறிவு அறியப்படும் பொருள் அறிபவன்’ எனும் இம்மூன்றும் அப்- பிறப்பினுடையே தோன்றி அல்லது கட்டப்பட்டு, இறக்கும் தருணத்தில்

அவ்-இறப்பினுடையே மறைந்து அல்லது அவிழ்ந்தும் போகும். அதாவது அறிவானது ஒவ்வொரு மனிதப்பிறவியுள்ளும் எக்கணத்திலும் அவிழ இருக்கும் அறிவாகவே விளங்கிக் கொண்டிருக்கும், எனினும்…

நின்றவர்க்கு:-

அருட்பெருஞ்ஜோதி அகவல்:113

“பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்

அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி” என்று

வள்ளல் பெருமான் தன் அகவலில் பாடியுள்ளபடி எக்கணத்திலும் அவிழ இருக்கும் இவ்வறிவுக்கு அறிவாய் சிவபெருமான் அதனுடன் சதா நின்று கொண்டு இருக்கிறார்!

அவிழும் இவ் அல்லல்:-

“ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்” என்று திருநாவுக்கரசு சுவாமிகள் தம் இறுதிப் பதிகத்தில் அருளியபடி, அறிவுக்கு அறிவாய் நம்முள்ளேயே விளங்கிக் கொண்டிருக்கும் அவனின் திருவடிகளை பற்றினால் ! இவ்வறிவு அவிழும் அத்தருணத்தில், அதாவது ஒன்பது வாசல் கொண்ட இம்மெய்யை விட்டு உயிர் பிரியும் அவ்வேளையில்…
அவனின் பேரறிவாற்றல் இம்மெய்யில் உள்ள ஒன்பது வாசல்களையும் ஒக்க அடைத்து, அவிழ இருக்கும் அறிவால் உண்டான உணராத தன்மையுடன் இரண்டற கலந்து, பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய், அருட்பெருஞ்ஜோதியாக பிரகாசிக்கும்!!
அன்றி அவிழாது :-

அவ்வாறு அறிவுக்கு அறிவாய் நம்முள்ளேயே விளங்கிக் கொண்டிருக்கும் அவனின் திருவடிகளை உணரப் பெறாதவர்களுக்கு, அறிவானது அவிழாமல் அகத்தினுள்ளேயே ஒடுங்குவதற்கு பதிலாக, மீண்டும் மீண்டும் இம்மெய்யிலிருந்து கட்டவிழ்ந்து போய் கொண்டேயிருக்கும்!!!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment