திருவாசகம் “பிடித்த பத்து”-3
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
சிவபெருமானே! இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே”?
இது திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள மூன்றாவது பாடலில் உள்ள வரிகள்.
இம்மை: என்பதற்கு இப்பிறப்பு; இவ்வுலக வாழ்வு என்று பொருள் உள்ளது.
“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்”
தவம் என்னும் அதிகாரத்தில் குறள் எண்:265 ல், வள்ளுவர் பெருமானும் ‘இம்மை’ இன்னும் சொல்லுக்கு ஒப்ப ‘ஈண்டு’ என்னும் பதத்தை இக்குறளில் கையாண்டுள்ளார்.
ஈண்டு : என்பதற்கு விரைவு, இம்மையில், இப்பிறவியில் இவ்விடத்தில், இவ்வுலகில், இப்பொழுது என்று பல பொருள்கள் உள்ளது.
சிவபெருமானை சிக்கெனப் பிடிப்பதற்கு, நினைக்கின்ற ‘அக்கணத்தை’ காட்டிலும் வேறு ஒரு தருணம் கிட்டவே கிட்டாது என்பதினால் இம்மையே: இப்பிறவியிலேயே, இவ்வுலக வாழ்வில், இப்பொழுது, இவ்விடத்திலேயே
“உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? என்பதை சொல்லிய இப்பாட்டின் பொருள் எனக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

