“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” .
திருமூலரின் திருமந்திரம்:
‘ஆசை‘ என்பது தனக்கு அந்நியமாக ஒரு பொருள் இருப்பதாக எண்ணும்போது அதன் மீது பற்று ஏற்பட்டு அதுவே ஆசையாக உருவெடுக்கிறது.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்,
“பார்ப்பவனின் பார்வையாகவும் நினைப்பவனின் நினைவாகவும் இருக்கும் பரமேஸ்வரனை யார் பார்க்கின்றானோ அவனே பார்க்கிறான்“என்று உபதேசித்துள்ளார்.
காண்போனுக்கு அந்நியமாக காட்சிகள் இல்லை, சிந்திப்பவருக்கு அந்நியமாக எண்ணங்கள் இல்லை! என்று உணரும் போது ‘பற்று’ என்பதும் அங்கு இல்லை, அதன் காரணம் ‘ஆசை’ என்பதும் அங்கு எழவே எழாது. பரமேஸ்வரன் அப்படிப்பட்ட காண்போனையே அவனாகவே இருந்து காண்பதாலும், பரமேஸ்வரன் அப்படிப்பட்ட நினைப்போனையே அவனாகவே இருந்து நினைப்பதாலும், அதாவது ஈசனாகிய அவன் மீது கூட பற்று என்பது ஏற்பட்டு அதுவே ஆசையாக உருமாறும் முன்பே அவ் ஈசன் அஷ்ர உருவாகவே நம்மில் இருந்து கொண்டு நம்மை ஆட்கொண்டு விட்டபடியால்…
திருமூலரின் திருமந்திரச்சொல்படி “ஈசனோ டாயினும் ஆசை அறுபட்டு போய்விடுகிறது”. அதாவது ஈசனான அஷ்ரத்துக்குள் நம் உருவம் ஒடுங்கி விட்டபடியால், அவ்–அஷ்ரத்தை அறியும் ஆசையும் கூட அறுபட்டு போய்விடுகிறது. மேலும் “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்” மறைந்து ஆனந்தம் பெருகப்பெருக ‘ஆசை’ என்னும் பேய் தாமாகவே நம்மை விட்டு விலகி விடுகிறது.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

