You Are That! -“Supreme Male”

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”. :குறள் எண்:214

“ஒவ்வொரு மனிதனும் மரணத்தை ருசிப்பார்கள், ஆனால் சிலர் மட்டுமே வாழ்க்கையை சுவைப்பார்கள் என்பதை நான் அறிந்தேன்.” – என்பது

சூபிஞானி ஹஸ்ரத் ரூமியின் மேற்கோள்.

இந்தக் கூற்று அந்தந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம்.

அதாவது ஒவ்வொரு மனிதர்களும், தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னும் எண்ணத்தோடு வாழ்ந்தாலும்,
அவர்களது வடிவத்தில் உள்ள ‘உயிரும் மெய்யும்’ ஒன்றையொன்று அறியாது தனித்தனியாகவே இருப்பதால், அவர்கள் வாழ்ந்தாலும் வாழ்வதாக பொருள் இல்லை.
ஆத்மா அழிவற்றது, நிலையானது, சிவமாவது .

‘மெய்’ என்பதற்கு, ‘உண்மை மற்றும் உடம்பு’ என்று இரு பொருள் உள்ளது. அதாவது இம்மெய் அழிவற்ற உயிருடன் ஒத்துப்போகும் அறிவை அறிந்து, அதனுடன் கூடி மெய்யின்பத்தை அனுபவிக்காமல் பொய்யாகிப் போனால், அது ஆண்மை இல்லாத தன்மைக்கு ஒப்பாகும்.
எவ்வாறெனின் ஒருவன் இல்லறவாழ்வை மேற்கொண்ட பின்னரும் கூட, அவனிடமிருந்து ஆண்மைத்தனம் வெளிப்படாது போயின் அவன் எவ்வாறு உலகத்தாரால் இயலாதவனாகவே பார்க்கப் படுகின்றானோ,
அவ்வாறே அரிதிலும் அரிதான இம்மானுட யாக்கை கிடைத்த

பின்னரும் கூட , அழிவற்ற சிவமான இவ்-உயிருடன் ஒத்துப்போகும் ஞானசக்தியானது, அவ்-வடிவத்திலிருந்து வெளிப்படாது போயின், அத்தகையோர் சக்தி அற்றவர்களாக சான்றோர்களால் கருதப்பட்டு, அவர்கள் வாழும்போதே செத்தாருள் வைக்கப்படுவார்கள். அதாவது அவர்கள் அறியாமலேயே தம் மரணத்தை ருசித்துக் கொண்டு இருப்பாரகள்…
மாறாக ஆண்டாள் நாச்சியார், வள்ளல் பெருமான், போன்ற ஆத்ம ஞானத்தை உணரப் பெற்றவர்கள், ‘உயிர் மெய்’ என தனித்தனியாக,
தமது ஒர் வடிவத்துடன் வாழாமல், மெய்யுடன் உயிர் கலந்த இணை பிரியாத உயிர்மெய் எழுத்தாக, ஞானசக்தியை தனதாக்கிக் கொண்ட ஆண்மை பொருந்திய வடிவாக***, மரணம் இல்லாத பெருவாழ்வை
பெற்று, தங்களது வாழ்வை என்றென்றும் சுவைத்துக் கொண்டே இருப்பார்கள்…
-வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:

“சித்திகள் எல்லாந் தெளிந்திட
எனக்கே
சத்தியை யளித்த தயவுடைத் தாயே”

“என்னுடல் என்னுயிர் எனன்னறிவு எல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே”
ஆண்டாள் நாச்சியார் மொழி:

“தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே”

விளக்கம்:
இப்பாசுரத்தில் ‘தம்மை’ என்று ஆண்டாள் நாச்சியார் தம் தேகத்துள்
குடி கொண்டிருக்கும் ஆத்ம சொரூபமான திருமாலையே இங்கு குறிப்பிடுகிறார். அதாவது தம் உயிரை நேசிக்கும் தம் மெய்யை,
தம்முடைய உயிரும் நேசிக்கும் என்னும் சொல்,

‘உயிர் மெய்’ கூட்டுறவால் உருவான தம் வடிவத்தில் பொய்யானால்!
வேறு எந்த வடிவம் எடுத்து, எவராக இருந்து, இப்-பொய்யை மெய்யாக்க முடியும்? என்னும் பொருள்பட இப்பாசுரத்தை பாடினாலும், தான் கொண்ட

அவ்-வடிவிலேயே மெய்யாக்கி சாதித்தும் காட்டியுள்ளார்!!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
***இறையாற்றலை தனதாக்கிக் கொள்ளும் திறன் படைத்த ஆண் பெண் என்னும் இரு பாலருமே, ஆண்மை பொருந்தியவர்களாகவே ஆன்மீக நிலையில் கருதப்படுவார்கள்.

Leave a comment