திருமூலர் திருமந்திரம் உரை எண்: 6 ன் விளக்கம்:

திருமூலரின் திருமந்திரம்: 6
“அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே”.

அவனை ஒழிய அமரரும் இல்லை:-

அமரத்துவத்தை அடையப் பெற்ற சான்றோர்கள் யாவருமே அருளே வடிவாய் விளங்கும் ‘சிவமேயாம்’. அருள் அற்ற (அவனை ஒழிய) அமரர்கள் என்பது எக்காலத்தும் இல்லை!
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை:-
அரும் தவம் என்பதே சதா சிவமாய் இருப்பதே. “அவனன்றி ஓர் அணுவும் அசையாது”, அசைவின்றி அரும் தவத்தை ஆற்றுவது என்பதும் இயலாத ஒன்று!

அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை:-
மூவர்கள் என்பவர்கள் ‘படைத்தல், காத்தல், அழித்தல்’ என்னும் மூன்று தொழில்களுக்கு அதிபதிகள். இம்மூன்று இயக்கங்களுக்கும்
(அசைவுகளுக்கும்) காரணமான ‘இசைவாகவே’ அவன் உள்ளதால், அவனன்றி இம் மூவரின் தொழில்களும் செயலற்றதாகவே இருக்கும்.
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே:-
இவ்வாறு அசையும் இசையும் இணைந்த சிவமாக, அதுவே பேரருளாக இருக்கும் அவன் அன்றி , ஊர் என்னும் இத் தேகத்துக்குள் புகுந்து அவ்-அருளுக்கு மாறாக அறிவதற்கு ஏதுமில்லை!

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment