You Are That! – “Immeasurable effort”

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு”. (குறள்:610)

பொதுப்பொருள்:

அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும்

சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

மெய்ப்பொருள்:

மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் திரிவிக்கிரமன் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார் என்பது புராணக்கதை.

வள்ளுவர் பெருமான் உவமானப் பொருளாக ‘அடியளந்தன்’ என்னும் இப்-புராணக்கதையை எடுத்துக்கொள்ள காரணம்?

‘சோம்பல்’ என்பதற்கு முயற்சியே அற்று இருத்தல் என்று பொருள் கொள்வதை விட, குறிப்பிட்ட அளவுகோல் உடைய முயற்சியும் கூட ஒரு வகையில் சோம்பலே ஆகும். இங்கு உவமானப் பொருளில் வானுலகையும், மண்ணுலகையும், மாபலி சக்கரவர்த்தியையும் அடையும் முயற்சிக்கு, அடியளந்தானுக்கு அளவுகோலாக மூன்று அடிகள் தேவைப்பட்டது. மாறாக ‘சோம்பல்’ என்னும் அளவுகோல் என்பதே இல்லாமல் முயலும் முயற்சி உடைய மாந்தர்கள் யாராயினும், அவர்கள் தம் மூன்று அடியால் உலகத்தை அளந்த அடியாளந்தான் தாவியப் பரப்பு எல்லாவற்றையும், ஒரு சேர அடைவார்கள் என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.

Leave a comment