You Are That!- “hunger reliever”

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி”. குறள் 226:

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
அற்றார்: என்பதிற்கு (ஏற்கும் மனம் இல்லாத) பொருள் இல்லாதவர் என்று பொருள் கொள்ளலாம்.

அழிபசி: என்பது கடும் பசி என்று பொருளாகிறது.

கடும் பசி உண்டாகும் தருணத்தில் பட்டினியால் கண்பஞ்சடைந்து, பார்வை மங்கி அத்தகையவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகைபோன்ற ஒன்றையே காண்பார் என்பது கடும் பசியின் தன்மையாம் !

இங்கு வள்ளுவர் பெருமான் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்று குறிப்பிடுவது, இத்தகைய பொருளற்றவர் இக்-கடும் பசியினால் வாடும் தருணத்தில் அப்பசியானது குறிப்பறிந்து அன்புடன் தணிக்கப்பட்டால், அதன் பொருட்டு உருவாகும் நன்றி பெருக்கானது நல்லோராயின், காலத்துக்கும் அவரது எண்ணங்களை விட்டு அகலாது இருக்கும்.

உரிய தருணம் வாய்ப்பின் அந்நன்றிக் கடனானது பன்மடங்கு பெரிதாய் உரியவருக்கு உரியமுறையில் திருப்பி செலுத்தப்படும் என்னும் பொருள்பட இக்குறளை வள்ளுவர் நமக்கு அளித்துள்ளார்.
இதற்கு சில காலம் முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தை இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்:

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க? தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்? கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். ரொம்ப நன்றி… சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

(வள்ளுவரின் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்பதும் இதுவேயாகும்.)

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்! அவளுக்கு கண்கள் பனித்தன. அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

‘அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி’ என்னும் வள்ளுவரின் வாக்கும் இங்கு மெய்ப்பிக்கப்பட்டது.

சாய்ராம்.

Leave a comment