Pure Grace

1.அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே

 2.அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை அருளுற முயல்கவென்று அருளிய சிவமே

3.அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் இருள்நெறி யென எனக்கு  இயம்பிய சிவமே

4.அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும் தெருளிது எனவே செப்பிய சிவமே

5.அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே

6.அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறஎன வகுத்த மெய்ச்சிவமே

7.அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும்பேறு இருட்பேறு அறுக்கும் என்றியம் பியசிவமே

8.அருள்தனி  வல்லபம் அதுவே எலாஞ்செய் பொருள் தனிச்சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே

9.அருளறியார் தமை அறியார் எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே

10.அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை பொருள் நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே

11.அருள் வடிவு அதுவே அழியாத் தனிவடிவு அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே

12.அருளே நம்மியல் அருளே நம்உரு
அருளே நம்வடிவாம் என்ற சிவமே

13.அருளே நம்அடி அருளே நம்முடி
அருளே நம்நடு ஆம்  என்ற சிவமே

14.அருளே நம்மறிவு அருளே நம்மனம் 
அருளே நம்குணமாம் என்ற சிவமே

15.அருளே நம்பதி அருளே நம்பதம் 
அருளே நம்மிடமாம் என்ற சிவமே

16.அருளே நம்துணை அருளே நம்தொழில் அருளே நம் விருப்பாம் என்ற சிவமே

17.அருளே நம்பொருள் அருளே நம்ஒளி அருளே நாம் அறிவாய் என்ற சிவமே

18.அருளே நம்குலம் அருளே நம்இனம் 
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே 

19.அருளே நம்சுகம் அருளே நம்பெயர் 
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே

20.அருளொளி அடைந்தனை அருளமுது உண்டனை அருள்மதி வாழ்கவென்று அருளிய சிவமே

21.அருள்நிலை பெற்றனை அருள்வடிவு உற்றனை அருளரசு இயற்றுகென்று அருளிய சிவமே

Leave a comment